கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நீதித் துறையின் மாண்பு கேள்விக்குறியா?’’

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் தகுந்த நியாயம், நீதி கிடைக்க வேண்டுமா? நம் நாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக இருப்பது நீதிதுறைதான். அந்த நீதி துறையிலேயே அதர்மம் தலைதூக்கினால் தர்மத்தையும் நியாயத்தையும் நிலைநாட்ட நாம் எங்கே செல்வது? யாரிடத்தில் சொல்வது?

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் குறித்த பல்வேறு செய்திகள் அண்மைக் காலமாக உலாவந்து கொண்டிருக்கின்றன. நீதிபதிகள் நியமனம் குறித்து பாரம்பரியமிக்க கடந்த சில நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில நடைபெறும் நிகழ்வுகள் மிகுந்த வேதனைக்குரியதாக அமைந்துள்ளன. பாரபட்சம் தலைதூக்குகிறது; சமூக நீதி புறக்கணிக்கப்படுகிறது; தர்மம் ஒளிந்து கிடக்கிறது; நியாயம் தொலைந்து போய்விட்டது; நீதி தலைகுனிந்துவிட்டது என்றெல்லலம் நீதிபதிகளின் நியமனம் குறித்து பலதரப்பு விமர்சனங்கள் உருவாகியிருக்கின்றன. தனால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நீதிமன்ற புறக்கணிப்புகள் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே முன்னின்று நடத்தி வருவதை ஊடகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மாண்புமிகு நீதிபதிகளின் பெயரிலேயே வருந்தத்தக்க வார்த்தைகளால் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அரசியல் சாசனம் வகுத்துப் பகுத்துக் காட்டிய மத, இன, சமூக அடிப்படையிலான உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு சிறுபான்மை இன மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்கிற பகிரங்க குற்றச்சாட்டுக்கு நீதித்துறை என்ன பதில் சொல்லப் போகிறது? இந்த விஷயத்தில் அரசு மவுனம் சாதிக்கக்கூடாது. மதச்சார்பற்ற அரசு என்பதற்கான வெளிப்பாடு நீதித் துறையிலேயே கிடைக்கவில்லையானால், வேறு எந்தத் துறையில் கிடைக்கப் போகிறது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு காலத்தில் 25 ஆக இருந்தபோது 2 அல்லது 3 நீதிபதிகள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திலிருந்து இடம் பெற்றிருந்தனர். அந்த மொத்த எண்ணிக்கை கால ஓட்டத்தில் 25 ஆக மாற்றப்பட்டு அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு 60 ஆக உயர்த்தப்பப்ட போதும் அதற்கேற்ப முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை உயரவில்லை. அதே 3 முஸ்லிம் நீதிபதிகள்தான்.

நீதியரசர் இப்ராஹிம் சலீபுல்லாஹ், நீதியரசர் கே.என். பாஷா ஆகிய இருவர் வழக்கறிஞர்கள் மத்தியிலிருந்தும் நீதியரசர் எம். அக்பர் அலி அவர்கள் பணி உயர்வு மற்றும் தகுதி அடிப்படையில் மாவட்ட நீதிபதிகளுக்கான ஒதுக்கீட்டிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டார்கள். 2010&ல் நீதியரசர் இப்ராஹிம் கலீபுல்லாஹ் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். 2011&ல் இவரால் காலியான ஓர் இடத்தை நிரப்ப ஒரு முஸ்லிம் நீதிபதியை நியனம் செய்யும் வகையில் மதுரையைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்களை அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் அவர்கள் பரிந்துரைக்க, ஆதிக்க சக்திகளின் சதித்திட்டத்தால் அவரின் பெயர் நீதிபதிகளின் நியமனப் பட்டியிலிருந்து நீக்கப்பட்டது. தீவிரவாத முத்திரை குத்தப்பட ஒருவருக்காக ஒரு வழக்கில் இவர் வாதாடினாராம். அதுதான் இவர்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டாம். தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவியாகக்கூட இருக்கலாம். அவரின் நியாயத்தை எடுத்துக்கூற, நியாயத்தை எடுத்தியம்ப இந்த வழக்கறிஞர் முயன்றது தவறா?

2013 ஏப்ரல் மாதத்தில் நீதியரசர் கே.என். பாஷா ஓய்வு பெற்றார். இதே ஆண்டில்தான் வழக்கறிஞர் முனீருத்தீன் ஷரீப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு எந்தக் காரணமும் சொல்லப்படாமல் அவர் பெயரும் நீக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை ஒன்று என ஆனது. அந்த ஒருவர்தான் இப்போது பணியாற்றி வரும் நீதியரசர் எம். அக்பர் அலி அவர்கள். இன்னும் சில மாதங்களில் இவரும் ஓய்வு பெறக்கூடிய காலக்கட்டத்தில் இருப்பது கவலையளிக்கிறது.

2013ம் ஆண்டு இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான காலி இடத்தை நிரப்ப 12 புதிய நீதிபதிகள் பெயர் கொண்ட பட்டியலை உயர்நீதிமன்ற காலேஜியம் உச்சநீதிமன்ற காலேஜியத்திற்கு அனுப்பியது. (காலேஜியம் என்றால் தலைலை நீதிபதி ஒருவரும் இரண்டு மூத்த நீதிபதிகளும் இடம் பெறும் தேர்வு செய்யக்கூடிய குழு) இந்தப் பட்டியலில் மாவட்ட நீதிபதிகளின் ஒதுக்கீட்டிலிருந்து பணி உயர்வின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜபருல்லாஹ்கான் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளள. இந்த பெயரை நியமனப்பட்டியலிருந்து எவரும் நீக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்திருக்கும் யதார்த்தம். காரணம் தகுதி அடிப்படையிலான பணி உயர்வு இது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் நீதியரசர் எம். அக்பர் அலி அவர்களின் இடத்தை இவர் பெறுவார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியான இரண்டு முஸ்லிம் நீதிபதிகளுக்கான நியனம் எங்கே? 

அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில் அப்துல் குத்தூஸ் என்பவர் வழக்கறிஞர்கள் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டவர் எனச் சொல்லி குறிப்பிட்டிருந்தார். இப்போது இவரின் பெயரும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஒரு மூத்த நீதிபதியின் மகனுக்கு நீதிபதி அந்தஸ்து வழங்குவதில்லை என்ற உச்சநீதிமன்ற காலேஜியய் எடுத்திருந்த முடிவின்படி அப்துல் குத்தூஸ் என்ற பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதாம். முன்னாள் நீதியரசர் அப்துல் ஹாதி அவர்களின் மகன்தான் இவர். உச்சநீதிமன்ற காலேஜியத்தின் முடிவு என்று தெரிந்தும் உயர்நீதிமன்ற காலேஜியம் ஏன் இவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தேர்ந்தெடுத்துவிட்டு இந்த காரணத்தைச் சொல்லி ஏன் நீக்க வேண்டும்? 

அப்படியானால் நீதிபதிகள் நியமனப் பட்டியலை வெளியிடுகிறபோது வேண்டுமென்றே அப்துல் குத்தூஸ் பெயரைப் போட்டுக் காண்பித்துவிட்டு எதையாவது சொல்லி இந்தப் பெயரை பிறகு பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம் என்கிற சதித்திட்டமா? கண்துடைப்புக்காக ஒரு முஸ்லிம் பெயரை அனுப்பி அது பிறகு நீக்கப்படட்டும் என்கிற கபட நாடகமா? இப்போது மட்டுமல்ல; கடந்த சில ஆண்டுகளாக இது போன்று சில முஸ்லிம் பெயர்களை அனுப்புவதும், ஏதாவது காரணம் சொல்லி நீக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பெயரை வெளியிடுவதற்கு முன்பு இந்த காரணங்களெல்லாம் நீதித்துறைக்குத் தெரியாதா? இப்போது அப்துல் குத்தூஸ் பெயர் நீக்கப்படுகிறதே! இவர் ஓய்வு பெற்ற நீதியரசர் அப்துல் ஹாதி அவர்களின் மகன் என்று முன்னரே தெரியாதா நீதித்துறைக்கு? என்ன பித்தலாட்டம் இது? யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்? இபடி அரங்கேற்றப்பட்ட கபட நாடகத்தின் இன்னொரு பின்னணி என்ன தெரியுமா? இந்த வழக்கறிஞர் அப்துல் குத்தூஸ் என்பவர் சுமார் 45 வயதுடையவர். இவர் இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கப்பட்டுவிட்டால் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருப்பதால் பணிஉயர்வு அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் ஆக்கப்பட்டுவிடுவார். ஒரு முஸ்லிம் நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதை இப்படித்தான் தடுக்க முடியும் என்றல்லவா செய்திருக்கிறார்கள்? இந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களின் 19.1.2014 தேதியிட்ட ஆக்கம் பாராட்டுக்குரிய ஒன்று.

தகுதியானவர்கள் மாத்திரமே நீதிபதிகளாக நியனம் செய்யப்பட வேண்டும் என்பதில் நமக்கு வேறுபட்ட கருத்தில்லை. சிறுபான்மை முஸ்லிம் சமூக வழக்கறிஞர்களில் தகுதியானவர்களே இல்லையா? நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு காட்சி தருவது வெறுமனே எதையும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்கல்ல; நியாயத்தை வெளிப்படுத்துகிறபோது பாரபட்ச கண்கள் கொண்டு வேறு எதனையும் பார்க்கக்கூடாது என்பதற்காக. ஜனநாயக நாட்டில் நீதித்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக விளங்கும் கலங்கரை விளக்கு நீதித்துறைதான் தீர்வுகளுக்கான பயணத்தின் இறுதி இலக்கு. இது ஆட்டம் கண்டுவிடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். 

தற்போது பட்டியலில் காட்டப்பட்டிருக்கும் இரண்டு முஸ்லிம் பெயர்களுடன் மேலும் தகுதியான இரண்டு வழக்கறிஞர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்; சமூக நீதிக்கெதிரான செயல்களுக்குச் சாட்டையடி தரவேண்டிய நீதித்துறையாக நிமிர்ந்து நின்றிடல் வேண்டும்; நீதிமன்றங்களுக்கே புத்தி சொல்லித் தரவேண்டிய அவல நிலையை அகற்றிடல் வேண்டும்; இதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லையானால் நீதித்துதுறயின் மாண்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிடுமே என்கிற அச்சஉணர்வு அவ்வப்போது நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. இந்த கவலை ஆட்சியானவர்களை ஆட்டங்காண வைக்கிற சமூகப் போராட்டமாக வெடித்துவிடக்கூடாது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறோம். அதே நேரத்தில் சமூக நீதியை நிலைநாட்டுகிற வேள்வியில் நீதித்துறையுடன் நமது கரங்கள் இறுகப் பிடித்திருக்கும்.

இன்ஷா அல்லாஹ். அன்புடன் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி..

முஸ்லிம் லீக்

0 கருத்துகள்: