கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை


அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....
நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை.

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ  உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும்  மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான  உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.

ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில்  தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.

குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை  பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.....

இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்கேட்க வேண்டும்....

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74
இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ...
பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த
துஆவை நாமும் கேட்போம்.

சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்....
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைதுணை
உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.

இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும்.
வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.....
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

அடுத்ததாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை. கணவனின் பாசமான தொடுதலும், அன்பான பேச்சும்  பெண்ணிற்கு மனதளவில் தெம்பையும், நம்பிக்கையை கொடுக்க கூடியது.

எளிதாக குழந்தை பெற்ற பெண்மணிகளிடம் ஆலோசனை கேட்டு கொள்வது  தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கும். சுகபிரசவத்திற்க்கும், சாலிஹான பிள்ளையாக வளர்வதற்கும் நாள்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ரப்புல் ஆலமீனிடம்  பிரார்த்திக்க வேண்டும்.

எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக)  மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச் சேரும். பைஹகி-401

இப்போதுள்ள பெற்றோர்கள் அழகிய பெயர்களை வைப்பதை விட்டு விட்டு  ’’தஸ் புஸ்’’ என்று புதுமைபெயர்களாக கண்டுபிடிக்கிறார்களாம். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த சுமையா (ரலி), பிலால் (ரலி) போன்றவர்களின் பெயரை நாம் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு வைத்துள்ளோம்??? 

நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க நாம் ஒவ்வொருவரும் அண்ணலாரின் பொன்மொழிகளை எளிய முறையில் கதைபோல சொல்லிக்கொடுப்பதும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம்செய்யாமல் இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்று பிள்ளைகளை நிர்பந்திக்கும் பெற்றோர்கள் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என இந்த ஹதீஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்???

அடுத்து, குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு இரண்டு வருடம் தாய் பால் ஊட்டுவது  தாய்க்கு இறைவன் இட்ட கட்டளையாகும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு  இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்  இறைவன் கொடுக்கும் அருட்கொடையே தாய்ப்பால் ஆகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளதாக அறிவியல் கூறுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாயின் உடம்பில் உள்ள வெப்பமும், கதகதப்பும் குழந்தைக்கு மிகப்பெரும்நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுப்பதாக  உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் அல்லாஹ் செவிலித்தாய் மூலமாகவதுகுழந்தைக்கு பாலூட்ட கட்டளை இடுகிறான்.

ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால்  அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை;  ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - 
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2;223

நமது குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டிய முறை பற்றி கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியதாவது....

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான)  ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள்.  அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள்.   ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார்.  அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர்  அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.புகாரி-5997

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்....?
தோளில் தட்டி கொடுக்கிறோம்...?
தலையை வருடிக் கொடுக்கிறோம்.....?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்...?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்...?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்.... இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல... தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)

அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.

அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்...

குழந்தைகளுடன் விளையாட வேண்டுமாம்...எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்....?7 வயது வரை.....!!!!

நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின்  சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???

அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!

அதற்கு அடுத்த ஏழு வயது அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக
வாங்கி கொடுக்கிறோம்..... அப்பொழுதுதான்  இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#புகாரி.

பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.
அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்... 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள்,குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள் போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்....

இன்னும் ஆண்களுக்கு நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை....
உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.#புகாரி

தந்தையும்,தாயும் வீட்டில் தொழுவதை பார்க்கும் பிள்ளைகள்அதே போன்று செய்ய உந்துதலாக இருக்கும். சம்பாதிப்பது மட்டும் தந்தையின் கடமை அல்ல. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதும் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952
இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்புடனும், அதிகாரத்துடனும்நடந்துகொள்வார்கள். குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடிப்பதால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தர வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி மென்மையான முறையில் பிள்ளைகளை கண்டியுங்கள்.
தவறு செய்யும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய
அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவன் விரும்பும் ஒன்றை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பிறர் முன் (உறவினர்கள்,நண்பர்கள்) பிள்ளைகளை கேவலப் படுத்துதல் கூடாது. அது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்க்கும்  100 மார்க் போட்டு வைத்திருக்கும்.ஏன் என்றால் தாய்தானே குழந்தையை  இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும்  ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்...
இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும்  சம்பாதித்து இருப்பார்.

உங்களிடம் கண்ணியத்துடன்  நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துவது உங்களின் கடமை!-அபுதாவூத்.

குழந்தை வளர்ப்பை பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு ஒரு அழகிய வழிகாட்டலை கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் என்ற விதத்திலே நடத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்காக பரிசளிக்க வேண்டும்.. மிரட்டல், உருட்டல் இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அதனை மாற்றிக்கொள்வோம்.

ஆண்,பெண் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டும் வகையில் உணவு,உடை விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது... அதிகமான வீடுகளில் ஆண்பிள்ளைக்கும் மட்டும் உணவு விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும்.அது மிகத் தவறு.

ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும்,கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால்இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.#அபுதாவூத்.

ஆம்.பிள்ளைகளை ஒழுங்காக வேறுபாடு காட்டாமல் வளர்த்தாலும் பெற்றோருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுகிறது....

ஒரு முஸ்லிம் தன் உயிரை விட அதிகமாக
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்...
இரண்டாவது தூதரை நேசிக்க வேண்டும்.
மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்....
நான்காவது இடம் யாருக்கு.....?
ஐந்தாவது இடம் யாருக்கு....?
அதுவும் தாய்க்குறிய இடம்
எனஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆறாவது இடம் தான் தந்தைக்கு......

மூன்று இடத்தை பெற்றுள்ள தாய் தன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்.... இன்ஷா அல்லாஹ் அன்பின் மூலமும், நல்ல ஒழுக்கத்தின் மூலமும் சிறந்த மனிதனை உருவாக்கலாம். ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவது சிறந்த சமுதாயத்தைஉருவாக்குவதற்கு சமம்....

இன்ஷா அல்லாஹ்,
நாம் அனைவரும் இஸ்லாம் மட்டுமே கூறும் வாழ்வியல்கலையின் மூலம் சிறந்த சமுதாயத்தை உண்டாக்குவோம்.

உங்கள் சகோதரி-ஆஷா பர்வீன்
இஸ்லாமிய பெண்மணி"

0 கருத்துகள்: