கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை


வாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக்  கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான்.

போட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக
சம்பாதிப்பதே சவாலான விஷயம். சத்தியங்களும், வாக்குறுதிகளும் சர்வ சாதாரணமாக மீறி, ஏமாற்றி பிழைப்பதை பிழையாக எண்ணாமல் பெருமையாக நினைப்பவர்கள் பெருகிவரும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்.

வான்மறை தந்த வழி முறையை, தூதர்(ஸல்) அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம். “கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும், நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்” (அல்குர்ஆன் 2:282)

இவ்வசனத்தை செயல்படுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட சிரமங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நிறையவே நிகழ்ந்துள்ளது. முட்டி விட்டு குனிந்து செல்பவர்கள்தாம் நாம். வலியை மட்டும் நினைவில் நிறுத்தியவர் எச்சரிக்கையோடு எப்போதும் இருப்பார். மறந்தவர்; காயத்தோடு காண்பது கண்கூடு. இறையச்சம் இல்லாதவர்கள் தாம் ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை துரோகத்தை நடுங்காமல் செய்கிறார்கள். இத்தகையவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திரம் அவர்களை தொடரவே செய்யும்.

அன்னியர்களிடம் எழுதி வாங்கலாம், கொடுக்கல்-வாங்கலை, அண்ணியோன்யமாக இருப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்வது? உறவுகளும், நட்புகளும் உரசிக் கொண்டு எதிரிகளாக மாறி போனதற்கு “அண்ணியோன்யம்” அசைக்க முடியாத நம்பிக்கையும் எழுதி வாங்க தடையாக இருப்பதாக நினைக்கிறோம். இழப்பு ஏற்படும் போது, ஏமாற்றப்பட்டு நிற்கும்போது ஏற்படும் அவமானமும், வேதனையும் எழுதி வாங்கியிருந்தால் இந் நிலைக்கு ஆளாகி இருக்காமல் தப்பியிருக்கலாமே என எண்ணத் தோன்றும். இப்பிரச்சனைக்கும் நெறிநூலே வழிகாட்டுகிறது.

நபிமார்களின் சரித்திரத்தை வழிநெடுக அல்லாஹ் சொல்லும்போது, வெறும் சம்பவங்களை மட்டும் சொல்லாமல் பல சங்கதிகளையும் சேர்த்தே சொல்கிறான். யாஃகூப்(அலை) அவர்க ளின் முதல் மனைவியின் பிள்ளைகள், இரண்டாவது மனைவியின் பிள்ளையான யூஸுஃப் (அலை) அவர்களை விளையாட அழைத்து சென்று, கிணற்றில் தள்ளிவிட்டு, ஓநாய் கடித்து விட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். பொய் ரத்தத்தை சாட்சியாக்கினார்கள். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, புன்யாமீனை அழைத்து செல்ல அனுமதி கேட்டார்கள் யாஃகூப்(அலை) அவர்களிடம். வலியை நினைவில் வைத்திருந்த அவர்கள் இப்படி சொன்னார்கள்.

“நாம் பேசிக்கொண்டதின் மீது அல்லாஹ்வே (சாட்சியாக) பொறுப்பேற்பவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 12:66) எழுதிக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, அல்லாஹ்வை சாட்சியாக்குவதன் மூலம் பாதுகாப்பை பெறுகிறோம். “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு உள்ள வலிமை மிகப் பெரியது; சொற்களால் விளங்க வைக்க முடியாது. அது ஒருவகையான அனுபவம். இறையச்சம் உடையவர்களுக்கு இவ்வகையான அனுபவங்கள் ஏற்படும். மேலும் அல்லாஹ்வே சாட்சியாளனாக இருக்கும்போது வருத்தம் ஏற்படாது. அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

மூன்று நபர்களுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்.
1. என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்
2. சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்
3. கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் வேலை வாங்கி கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
நபி வழி செய்தியாளர்: – அபூஹுரைரா(ரழி) நபி வழி தொகுப்பு நூல்: புகாரீ 2270/2

நெறிநூல் தந்த வழிமுறையும், தூதர்(ஸல்) அவர்களின் செயல்முறையும் பின்பற்றும்போது பெரிய வருத்தங்களுக்கு இடமே இல்லை. வல்ல ரஹ்மான் இதற்கான வழியை எல்லா முஸ்லிம்களுக்கு வழங்க “துஆ’ செய்வோம். ஆமீன்.

பெங்களூர் MS. கமாலுத்தீன்

0 கருத்துகள்: