கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஜமாஅத் ஒரு சிறப்புப்பார்வை.

ஜமாஅத் அல்லது ஜமாத் என்று குறிப்பிடப்படும் சொல்லின் பொருள் என்னவென்று பார்த்தால், கூட்டமைப்பு அல்லது குழு என்பதாகும். முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் தங்களுக்கென்று ஜமாத் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பார்கள்.


 இது சமுதாய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துகிறது. தங்களிடையே எழும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், திருமணம் மற்றும் விவாகரத்து, சொத்துப்பிரச்சினைகளை குர்‍ஆன்,‍ஹதீஸ் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளவும் ஜமாத் அவசியமாகிறது எனவே இதன் நோக்கமும் இதுவாகிறது.


ஒவ்வொரு குடும்பமும் தனித்தனி தீவாக தனித்திருக்காமல் இஸ்லாமிய முறைப்படி இணைந்து வாழ வழி வகுப்பதே ஜமாத்.
ஜமாத்தின் முக்கிய பணியாக பள்ளிவாசலைப் பராமரிப்பதும், திருமணங்களை நடத்தி வைப்பதும் அதன் ஆவணங்களைப் பாதுகாப்பதுமாக நடைமுறையில் இருந்து வருகிறது. திருமணப் பதிவுகளை அரசின் கீழ் இயங்கும் பத்திரப்பதிவு துறைக்கு இணையாக பாதுகாத்து வருவது இதன் சிறப்பு. தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஜமாத்களையும் அதன் தலைமைகளையும் வக்ப் வாரியம் என்ற அரசின் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. இதன் கீழ் தான் எல்லா ஜமாத்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களும் அதன் சொத்துக்களின் பராமரிப்புகளையும் கவனிப்பதும் வாரியத்தின் பணியாகும். ஊரிலுள்ள தனவந்தர்கள், செல்வந்தர்கள் தங்களது பெரும்பகுதியான சொத்திலிருந்து பள்ளிவாசல்,மற்றும் ஊரில் நலன் கருதி கொடையாக கொடுத்த சொத்துக்களே பள்ளிவாசல் மற்றும் ஜமாத் சொத்துக்களாகும்.


ஜமாத்தின் வருமானம் ஒவ்வொரு ஜமாத்திற்கும் வேறுபடுகிறது என்றாலும் உறுப்பினர்களிடையே சந்தாவாக சிறு தொகை வசூலிக்கின்றனர். ஜமாத்திற்கு சொந்தமான நில புலன்கள், அதிலிருந்து கிடைக்கும் வரவுகள், கட்டிடங்க‌ள்,திருமண அரங்கம் இருப்பின் அதன் வாடகை வருமானங்களும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் சிறு தொகைகளை வசூலிப்பதன் மூலமும், வெளிநாடு சென்று வரும் உறுப்பினர்களிடம் மகமை பணமாக வசூலிப்பதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகின்றனர். இத்த‌கைய‌ வ‌ருமான‌த்திற்கு ஆண்டு தோறும் ஆறு ச‌த‌வீத‌த்தை த‌மிழ்நாடு வ‌க்ப் வாரிய‌த்திற்கு வ‌ரியாக‌ செலுத்தி முறையான‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை ச‌ம‌ர்பிக்க‌ ஒவ்வொரு ஜ‌மாஅத்தும் க‌ட‌மைப்ப‌ட்டுள்ள‌து. இதிலிருந்து த‌வ‌றுகிற‌ ஜ‌மாத்தின் மீது ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌வடிக்கை எடுக்க‌ வ‌க்ப் வாரிய‌த்திற்கு அதிகார‌ம் உண்டு.


ப‌ள்ளிவாச‌ல் ப‌ராம‌ரிப்பு,மின்சார‌ம், த‌ண்ணீர் க‌ட்ட‌ண‌ம், இமாம் ம‌ற்றும் மோதினார் ச‌ம்ப‌ள‌ம், மேலும் சில‌ உறுப்பின‌ர்க‌ளால் சில‌ச‌ம‌ய‌ம் ஏற்ப‌டுகின்ற‌ வ‌ழ‌க்கு செல‌வுக‌ள் போன்ற‌வை ஜ‌மாத்தின் செல‌வின‌ங்க‌ளாகும்.

ஜமாத்தின் அதிகாரம் மிகவும் வரையறுக்கப்பட்டது. திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரிவினை போன்றவைகளை இஸ்லாமிய தனியார் சட்ட அடிப்படையில் மட்டுமே தீர்த்துவைக்கிறது. இவ்விசயங்களில், இஸ்லாமிய சட்டத்திற்கு முரனாக தன்னிச்சையாக ஜமாத் முடிவெடுக்க முடியாது. இது தவிர, ஊரில் வசிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் ஒழுங்குமுறையை பாதுகாப்பதற்காக, சமுதாய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சூழ் நிலைக்கேற்ற கட்டுப்பாடுகளை, நடவடிக்கைகளை சுயமாக வரையறுத்துக்கொள்ள அதிகாரமிருக்கிறது. ஜமாத் நிர்வாகம், அரசின் காவல் மற்றும் நீதி துறையின் அதிகாரத்திற்கு முழுவதும் கட்டுப்பட்டது. அதனால் ஜமாத் எடுக்கும் முடிவுகளில் காவல் துறையும் நீதிமன்றமும் தலையிட முடியும்.


சமுதாய நலன் மற்றும் முன்னேற்றத்துக்காக ஜமாத் நிர்வாகம் இயற்றும் கட்டுப்பாடுகளை உறுப்பினர்கள் அனைவரும் மதித்து நடக்க கடமைபட்டவர்கள். அப்படி மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜமாத்திற்கு அதிகாரம் உண்டு. இத்தகையவர்களை வழிக்கு கொண்டுவர எடுக்கப்படும் எல்லா முயற்சிகள் தோல்வியடைந்தால், இறுதி முயற்சியாக, ஜமாத் நிர்வாகிகளில் பெரும்பான்மையோரின் முடிவின் அடிப்படையில், ஜமாத்தை மதிக்காத, குறிப்பிட்ட நபர் சம்பந்தமான விசயங்களிலிருந்து ஜமாத் நிர்வாகமும், உறுப்பினர்களும் முற்றிலும் ஒதுங்கிக்கொள்வார்கள். அவர் வீட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுகளிலும் ஜமாத்தை சார்ந்த எவரும் கலந்துக்கொள்ளமாட்டார்கள்.


ஜமாத் இன்னும் திறம்பட செயல்பட அதன் நிர்வாகங்களை பல்வேறு துறைகள் அல்லது பணிகளாகப் பிரித்து உதாரணமாக.. கல்வி கற்பதை ஊக்குவிக்கவும்,அதற்கு உதவிகளை செய்வதற்கும் ஒரு துறை, தலாக்,சொத்துப்பிரச்சினைகள் போன்றவைகளுக்கு மார்க்கம் அறிந்த அறிஞர்களைக் கொண்டு தீர்ப்பதற்கு ஒரு துறை என்று நிர்வாகத்தை பல பணிகளாக பிரித்துக்கொண்டு செயல்பட்டால் இன்னும் பெரிய நன்மைகளை முஸ்லிம் சமுதாயம் பெற முடியும்.

(இக்கட்டுரை "ஜமாஅத் என்றால் என்ன " என்ற திண்ணை கட்டுரையை தழுவி எழுதப்பட்டதாகும்)
நன்றி:வவ்வை நகர்

0 கருத்துகள்: